.

Pages

Monday, December 10, 2012

பாதுகாப்போம் : முதியோர்களை !!!



உலகின் 100 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 3.16 லட்சம் என்கிறது ஆய்வு அறிக்கை !

குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தும், தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தும் அவர்களின் எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டி அதற்கு தாய் தந்தையர் பெயரைச் சூட்டி மகிழும் பிள்ளைகள் அவர்களை கவனிக்கத் தவறி விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை !

வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....

5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

6. தேவையான நேரத்தில் உன்ன உணவுக் கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களாகட்டும்...

7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

9. பிள்ளைகள் மூலம் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு அன்றாட பொழுதுகளை துயரத்துடன் கழிப்போரும்...

10. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

வயதான தாத்தா - பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது என்பதையும் இளம் வயது அறிவுக்கு புலப்படாத பல விசயங்களை மூத்தவர்களின் அனுபவத்தால் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசின் சார்பாக வருமான வரிவிலக்கு, ரயில், விமான பயணங்களில் கட்டண சலுகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி கெளரவிக்கும் போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்/தந்தையருக்கு நமது கடமைகளை செலுத்த மறந்துவிடுகின்றோம்.

1. குறிப்பிட்ட நேரத்தில் சத்தான உணவு
2. போதுமான உடற்பயிற்சி, ஓய்வு
3. நண்பர்கள், குடும்பத்தினருடன் பழகுதல்
4. குழந்தைகளுடன் விளையாடுதல்
5. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை
6. சமூக சேவைகளில் ஈடுபடுதல்

போன்றவற்றில் அவர்களை கவனம் செலுத்தவைத்து, அவர்கள் படும் கஷ்ட/நஷ்டங்களை நன்கு புரிந்து அதற்கேற்றார் போல் அவர்கள் மீது பரிவு/பாசத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம்.

இன்றைய இளைஞன்-இளைஞி ! நாளைய தாத்தா - பாட்டி !!
வாழ்க தாத்தா - பாட்டி ! வளர்க அவர்களின் ஆரோக்கியம் !!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    காலத்தின் மாற்றம், மனிதன் மாறின கொடுமை.
    நவீனம், அது மனிதனை குழப்பத்திலாக்கியது.
    பணம், அது மனிதனை பண்பில்லாமலாக்கியது.

    (1980) 30 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட்டு குடித்தனமாக ஒருமனப்பட்டு வாழ்ந்து வந்தார்கள், அடுத்த வீடு, பக்கத்து வீடு, எதிர்வீடு இப்படி பழகி வாழ்ந்து இருக்கிறார்கள், பெரியவர்கள் சிறியவர்கள் நட்பு வளர்ந்து இருந்தது, கலந்து ஆலோசிக்கும் தன்மை இருந்தது, யாராவது ஒரு பெரியவர் எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருந்தது.

    அந்த நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் வயதான தாத்தாவோ அல்லது பாட்டியோ வெற்றிலையை ஒரு செம்பினாலான இடிப்பானுக்குள் இட்டு இடிக்கும் சப்தம் ஏழு வீடுகள் தள்ளியும் டிங் டிங் டிங் என்று கேட்கும்.

    இன்று அந்தச் சப்தம் எங்கே?
    தாத்தா பாட்டி இருந்தால்தானே.

    (2012) இன்று எப்படி இருக்குது?
    சிந்தித்து பார்க்க நேரமாவது இருக்கா?

    காலம் மாறலாம், நவீனங்கள் புதுசு புதுசாக உண்டாகலாம், இன்னும் வேறு எதுவெல்லாம் காலத்திற்கு ஏற்றார் போல் மாறலாம்,ஆனால் அந்த 24 மணிநேரங்கள் மட்டும் மாறவில்லை அன்பான சகோதர பெருமக்களே. அந்த 24 மணிநேரங்கள் நம் வாழ்க்கையின் தரத்தை குறிக்கின்றது.

    இதுஒரு அருமையா உருவாக்கம், இதை படிக்கும் சகோதர பெருமக்களே, மாணவச் செல்வங்களே, சிறார்களே சிந்தியுங்கள், இன்று நாம் எல்லோரும் நாளைய தாத்தாவாகவோ பாட்டியாகவோ இருப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. இன்றைய சூழலில் அனைவரும்
    அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
    கடைபிடிக்கவேண்டிய விஷயங்களை
    விரிவான பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முதியோர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் வயது நமக்கு ஒரு எக்ஸ்பிரியன்ஸ்.

    பதிவுக்கு நன்றி. சேக்கனா M. நிஜாம் காக்கா அவர்களுக்கு.

    ReplyDelete
  4. முதியோர் இல்லா வீடு
    கனியில்லா மரம் போல
    வளம் பெற்ற குடும்பம்
    பாட்டி தாத்தா உள்ள குடும்பம்பம் தான்
    பாட்டி தாத்தா அன்பு கிடைக்க
    குழந்தைகள் கொடுத்து வைக்க வேண்டும்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers