.

Pages

Wednesday, October 16, 2013

வேலி

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே
......உணர்ந்துதான் செயல்படுநீ - என்றும்
விழுப்பமே தந்திடும் பலன்களைப் பார்த்ததும்
.......மேன்மையாய் உயர்ந்திடுநீ!

கண்களின் பார்வையைத் தாழ்த்தியே நடப்பதும்
.....கண்களின் வேலியாகும் - இஃதே
பெண்களின் உள்ளமும் உன்னிடம் மதிப்பினைப்
.....பெற்றிடும் வேலையாகும்!

நாணமும் வேலியாம் மானமே காத்திட
…..நம்பினோர் நலம்பெறுவர் --அதனால்
காணலாம் நற்பயன் உள்ளமும் உடலுமே
….களிப்பினால் பலம்பெறுமே!

வறுமையும் வதைத்திடும் போதினில் இறையவன்
....வழிதனைப் பேணுவாய்நீ - அதற்குப்
பொறுமையாம் வேலியைப் பூட்டியே காத்திடு
....புலம்புதல் நாணுவாய்நீ!

உண்மையை வேலியாய்ப் பூட்டிட மவுனமாய்
....உதடுகள் காத்ததனால்-- என்றும்
திண்மையாய் உரம்பெறும் மனத்தினில் ஏற்படும்
...தெளிவிலா வார்த்தைகளும்!

மரபெனும் யாப்ப்பினை எழுதிட இலக்கண
.......வரம்புகள் முழுமையாகும்-- வேலியாய்
வரப்புகள் கட்டிய பாத்திகள் இடுவதால்
........வயல்களும் செழுமையாகும் !

மக்களைக் காத்திடும் வேலியாய் அரசியல்
......வளம்பெறல் மெய்தானா? -அந்த
மக்களை மறந்திட நினைப்பதும் மனத்தினில்
....மண்டிய பொய்தானா ?

வேலியே பயிரையும் காப்பதாய் நினைப்பது
.. வேகமாய்ச் சுருட்டுகின்ற  - இவர்கள்
போலிகள் என்பதை உணர்ந்திடும் போதினில்
.. புரிந்திடும் திருட்டுகளும்!

வண்ணப்பாடல் \தனதன தனன தான/ கருவிளம் புளிமா தேமா

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 09-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

29 comments:

  1. போலிகள் என்றும் சமூகத்தில் இருந்தே விரட்டப்பட வேண்டியவர்கள்.

    கவிக்குறளின் இந்தக்கவிதை வழக்கம் போல் சமூக அக்கறை மேலோங்கி காணப்படுகிறது.

    தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய சிறந்ததொரு ஆக்கம்.

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஜஸாக்கல்லாஹ் கைரன். மிக்க நன்றி. சமூக அக்கறையும் கவிஞனின் ஓர் அடிப்படைக் குணமாகும். நிற்க. இத்தலைப்பை வழங்கிய இலண்டன் வானொலி நிலையத்தார்க்கு நன்றிகள். தொடர்ந்து இலண்டன் வானொலியின் ஒலிபரப்பை யூட்யூப் இணைப்பில் பதிவிறக்கம் செய்யாமல் விடுப்பட்டு விடுவது ஆங்குச் சென்று காத்திருந்துக் காத்திருந்துப் பின்னர் அவர்கள் எழுதும் மறுமொழியில் “நாங்கள் யூட்யூபில் ஏற்றினோம்; ஒலிபரப்பிற்குப் பின்னர்; ஆனால் சில சமயங்களில் யூட்யூப் முழுமையாக ஏற்காமலிருப்பதும் ஒரு வகையான டெக்னிகல் பிரச்சினை; மன்னிக்கவும்” என்று எழுதினாலும், எனக்கும் நேரமின்மை கரணீயமாக ஆங்கு(யூட்யூபில்) க்காத்திருந்து என் பாடல் ஏற்றப்பட்டுள்ள பகுதியை மட்டும் கண்டு அந்த இணைப்பை ஈண்டு எடுத்துப் பதிய இயலவில்லை.

    ReplyDelete
  3. கருத்துள்ள பாடல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. போலிகளிடமிருந்து நம்மைக் காப்பது நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் வேலிதான். அருமையான கருத்தை சொல்லும் கவிதை. லண்டன் வானொலியில் ஒலிபரப்பானதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய சகோதரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மனம்நிறைவான நன்றிகள்.

      Delete
  5. கவித்தீபத்தின் வேலி கவிதையாக மட்டுமல்லாது நமது சமூக விழிப்புணர்வு பக்கத்தை பாதுகாக்கும் ஒரு வேலியாக இருக்கட்டும். தாங்களது கவிதையை வாசித்தேன். மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது விருந்தோம்பலும், சுவையான பசியாறுதலும் கண்டதும் உண்டதும் இன்னும் நினைவில் நிற்கும் வேளையில், உங்களின் இவ்வாழ்த்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். மிக்க நன்றி.

      Delete
  6. நல்ல பல கருத்துக்கள் உள்ளடக்கிய வேலி...
    கூலியாய் ...உங்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. யான் எதற்கும் “கூலி” பெறுவதில்லை என் ஊழியத்திற்குத் தவிர. ஆயினும், உங்களின் ஆசிகள் என்னும் துஆவினால் இறைவன் ஒருவனே கூலி தரப் போதுமானவன். மிக்க நன்றி,

      Delete
  7. தழைதமிழ் காதலில் சுவைபட பாடல்கள்
    ......தரத்துடன் நான்தர - விரும்பினேன்
    ...தகுதிகள் வேண்டிட முயற்ச்சிகள் தூண்டிட
    ......தருணங்கள் தோன்றின

    வலைதள சேக்கன செயல்களில் பார்வைகள்
    ......விழுந்தன பாக்களில் - கவிகலாம்
    ...விருத்தங்கள் பாடல்கள் எழுதிட தூண்டின
    ......விபரங்கள் சேர்ந்தன.

    இழைத்தவெண் பாதனை இதனுடன் பார்க்கவும்
    ......எதனையும் கூறவும் - மனம்கொண்டேன்
    ...இவையுடன் வேலியில் ஒழுக்கங்கள் பேணுதல்
    ......இறையவன் கூற்றுகள்

    கலைகளை காத்திடும் கவிங்கர்கள் தாங்களில்
    ......கவர்ந்தன யாப்புகள் - துதிக்கிறேன்
    ...கனவுகள் மீண்டன கவிதைகள் தோன்றின
    ......கவிங்கர்கள் வாழிய.

    வண்ணப்பாடல்/ தனதன தானன தனதன தானன
    தனதன தானன- தனனனா

    கடவுள் வணக்கம்.

    இல்லாத தில்லா திருக்கு மேகனே !
    உள்ளவுன தில்லறிந்தே னுன்னிலேநான் - எல்லாமே
    என்னிலு மெம்மாய் யிருக்கு முமைதினம்
    தன்னில் தவறா தொழுவேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் குரு நபிதாஸ்

      என் மேற்காணும் வண்ணப்பாடலின் ஒசைக் குறிப்பும்

      தனதன தானன தனதன தானன
      தனதன தானன - தனனனா

      என்பதன் வாய்பாடாக

      கருவிளம், கூவிளம், கருவிளம், கூவிளம்,
      கருவிளம் கூவிளம் -கருவிளங்காய்

      என்பதேயாகும்,,

      ஆயினும், என் பாடலின் கீழ்க்குறிப்பிட்ட ஓசைக் குறிப்பு

      யான் இயற்றி அடுத்த வாரம் இங்குப் பதிய இருக்கும் கீழ்க்காணும் பாடலை ஆயத்தமாக்கிக் கொண்டிருந்த வேளையில், தம்பி நிஜாம் அவர்கள் உடன் என் பாடல் இன்று பதிவுக்குள் வரக் காத்திருப்பதாய்ச் சொன்னதும் யான் இயற்றிக் கொண்டிருந்த அடுத்த வாரப்பாடல் இன்று இலண்டனுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஓசைக்குறிப்பை எடுத்து அனுப்பி விட்டேன்; இந்தத் தவறை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய உங்களின் பின்னூட்டப் பாடலில் என் மேற்காணும் இந்தப் பாடலிற்கான சரியான ஓசைக் குறிப்பை வைத்தே யாத்துள்ளீர்கள் எனபதும் அறிவேன். இருப்பினும், ஓசைக்குறிப்புகள் மட்டும் இருக்கும் உங்கள் விருத்தத்தில் எதுகை ஒன்றி வராமையும் நோக்கினேன்.


      \\படிக்கவே அனுப்பிப் பெற்றோர் பயத்துடன் இருக்கும் ஆசை
      அடிக்கவா அறிவை ஊட்டி அனுதினம் வளர்த்தார் ஆசான்?
      வெடிக்குதே மனமும் ஏனோ விடியலின் சமயம் செய்தி
      படித்ததும் எனக்கும் தானே படிப்பவர் செயலை எண்ணி\\ இப்பாடலே அடுத்த வாரப் பதிவுக்கு யான் இயற்றியதன், இந்தப் பதிவில் உள்ள ஓசைக்குறிப்பு.

      மாறிப் பதிவானதன் தவறு யான் எடுத்து அனுப்பியதன் அவசரமே!

      உங்களின் கடவுள் வணக்கம் வெண்பாவில் ஓரிடத்தில் “தளைதட்டுதல்” காண்க:

      \\திருக்கு மேகனே\\

      மேலும், வெண்பாவின் ஈறில் நாள், மலர், காசு, பிறப்பு என்று முடியும் நேர், நிரை, நேர்பு, நிரைபு இவற்றுள் உங்கள் வெண்பாவின் ஈற்றில் \\ தொழுவேன்// என்பதில்
      புளிமா இருப்பதால் இதனையும் சீர் செய்தால் இந்த வெண்டுறை , வெண்பாக முடியும்.

      திருக்கும் இறைவனே என்று மாற்றினால் தளை தட்டல் நீங்கும்.

      மேலும், :ல்” “ள்” எதுகையாகாது.

      Delete
    2. குரு நபி தாஸ் அவர்களுக்கு,
      அஸ்ஸலாமு அலைக்கும்

      உங்களின் வண்ண்ப்பாடலை “14 சீர் கழிநெடிலடி விருத்தம்” என்று ஏற்றுக் கொண்டால், எதுகைச் சரியானதே!

      Delete
    3. //தனதன தானன தனதன தானன
      தனதன தானன - தனனனா

      என்பதன் வாய்பாடாக

      கருவிளம், கூவிளம், கருவிளம், கூவிளம்,
      கருவிளம் கூவிளம் -கருவிளங்காய்//

      தனனனா--கருவிளங்காய் என்று எழுதியதால் கருவிளம் தானே என்பதாகக் கேட்டேன். ஆசிரியப்பா அதனில் குலம்பியது போல் தோற்றம் தந்தது அனைத்தையும் ஒருங்கே எழுதியதால்.

      Delete
    4. \\தனனனா\\ தட்டச்சுப்பிழைக்கு மன்னிக்கவும்

      இறுதிச் சீர் “ தனதனனா”= கருவிளங்காய்

      மேலும், ஓர் அரிய குறிப்பு: விருத்தத்திலும், வண்ணப்பாவிலும் தனதனானா = கருவிளாங்காய் (நெடிலில்) வரக் கூடாது.

      நிற்க. தங்களைப் போன்ற ஞானிகளுக்கு “இறைவேண்டல்” கருவாய் அமைத்துப் பாட, யான் மேற்கூறிய 14 சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடல் வனைந்தால் உணர்வின் ஓசையுடன், ஓட்டமும் அருவியாய்க் கொட்டும்; அதனைக் கேட்கவும், பார்க்கவும் தான் யான் அடியெடுத்துக் கொடுத்தேன். இங்குப் பின்னூட்டத்தில் எழுதி , இலக்கணம் என்றால் கைப்புடன் இருக்கும் என்று எவரும் மறு பின்னூட்டமிட்டு விடலாம் என்பதற்காகவே, தங்களை என் மின்மடல் முகவரியில் தொடர்பு கொள்ளச் சொன்னேன்.

      Delete
  8. நபிதாஸ் என்னும் நன்னெறி குருவே, உங்களின் தனிமடல் முகவரி எனக்குத் தெரியாதென்பதால், ஈண்டுப் பின்னூட்டத்திலேயே திருத்தங்கள் எழுதினேன்.

    ReplyDelete
  9. தவறில்லை. விரும்புவோர் அனைவரும் கற்கலாம்.

    மேலும்,
    தனனனா- இது கருவிளம் எனக்கொள்ளுதல் தவறாகுமோ ?
    பிறப்பு- புளிமா எனக்கொண்டு /தொழுவேன்/ எழுதினேன். அது தவறென்றால் உகரத்தில் முடிய வேண்டுமோ ?
    ல்” “ள்” - ஓசை ஒற்றுமையில் எழுதிவிட்டேன். திருத்திக்கொள்கிறேன்.
    /உங்களின் வண்ண்ப்பாடலை “14 சீர் கழிநெடிலடி விருத்தம்” என்று ஏற்றுக் கொண்டால், எதுகைச் சரியானதே!/
    அவ்வாறானால் ஒரு தொங்கல் சேர்கவேண்டுமா ?

    நன்றி ! திருத்தங்கள் ஏற்பட்டமைக்கு.

    ReplyDelete
  10. நமது நடைமுறைக்கு போட்டு கொள்ளும் வேலி நமது தலைமுறைக்கும் உதவும். அருமையான வரிகள் வாழ்த்துக்கள் கவிக்குரல் அபுல் கலாம் காக்கா அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களாய் (ஊரில் விடுப்பில் கண்டதற்குப் பின்னர்) உங்கள் முகம் காணாதிருந்தேன்; மீண்டும் பின்னூட்டங்களில் காணுதற் கண்டு களிப்படைகிறேன். அன்பின் நேசர் ஹபீப் அவர்களே! உங்களின் வாழ்த்தினுக்கு உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  11. நற்றமிழ்ப் பாவலர் நபிதாஸ் குருவே,

    தனனனா=நிரைநிரை= கருவிளம்

    இதில் ஐயம் வருதல் ஏனோ?

    பிறப்பு= புளிமா= தொழுவேன் என்பது சரிதான்; ஆயினும் நன்றாகக் கியாபகத்தில் வைக்கவும், புளிமாவாக ஈற்றில் முடிந்தால் அது வெண்பாவின் இலக்கணம் பிறழ்ந்து “வெண்டுறை” ஆகும். இதனால் நினைவில் கொள்க:

    நேர் , நேர்பு
    நிரை, நிரைபு

    என்று மட்டும் கொண்டால் நேர் = நாள்; நேர்பு= காசு; நிரை= மலர்; நிரைபு= பிறப்பு என்பதாக ஈற்றில் முடிக்கலாம்.

    உங்களின் அனுமதியின் பேரில், யான் திருத்தியமைத்த உங்களின் வெண்பா இதோ:


    இல்லாத தில்லா திருக்கும் இறைவனே !
    உள்ளவுன தில்லறிந்தேன் உன்னிலேநான் - எல்லாமே
    என்னிலு மெம்மாய் இருக்கும் உனைதினம்
    தன்னில் நினைக்கும் தவம்

    நீங்கள் வண்ணப்பாடலை என் பதிவின் பாடலுடன் அடியொற்றி எழுத முனைந்திருப்பின், நான்கு அடிகளைக் கொண்டு அமைத்தால்,

    முதலாம் அடியின் முதற்சீருக்கும், மூன்றாம் அடியின் முதற்சீருக்கும் எதுகை அமைத்திருந்தால், என் பாடலை அடியொற்றியே முதலாம் அடியும் மூன்றாம் அடியும் நான்கு சீர்களாகவும், இரண்டாம் அடியும், நான்காம் அடியும் இரு சீரகளாகவும் அமைக்கும் பட்சத்தில், இரண்டாம் அடியின் இரண்டாம் சீரை அடுத்துத் தனிச்சொல் அமைக்கலாம் (தனிச்சொல்லுக்கு ஓசை, அசை இல்லை)

    ஆனால், நீங்கள் 14 சீர் ஆசிரிய விருத்தம் எழுத நினைத்து எதுகைகள் முதலாம் அடிக்கும், ஐந்தாம் அடிக்கும் ஒன்றியவாறுத் தொடர்ந்து இறுதிவரை அவ்வண்ணம் அமைக்கும் பொழுதுத் தொங்கல் வராது. மேலும், உங்களின் அந்த வண்ண்ப்பாடலில் தனிச்சொல்லைத் தனிசொல்லாகக் கருதாமல் அசையாக எடுத்தாலும், 13 சீர்களே உள. எனவே,

    ஒன்று: யான் இயற்றிய வண்ணம் அப்படியே அடியொற்றி
    முதலாம் அடிக்கும் மூன்றாம் அடிக்கும் எதுகைகள் ஒன்றிவரும் வண்ணம், நான்கு நான்கு அடிகளாக மாற்றுக.

    அல்லது,
    கீழே தரும் வாய்பாட்டைப் பயன்படுத்தி அசைகள் மாற்றி(வாய்பாட்டின்படியே) 14 சீர்கள் அமைத்தால் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும்.

    ஏனெனில்,

    வண்ணப்பாடல் வேறு
    ஆசிரிய விருத்தம் வேறு

    இரண்டையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்டதன் விளைவே இஃதாகும்,

    கற்றுக் கொள்ளும் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

    உங்களுக்கான பயிற்சி: 14 சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திற்கான வாய்பாடு இதோ:

    14 சீர் விருத்தம் 6 மா+1 விளம் அரையடிக்கு=7 x 2= 14

    அல்லது

    பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்: அரையடி வாய்பாடு: தேமாங்காய், விளம் காய் விளம் காய் விளம் காய்.

    அல்லது

    14 சீர்கள் (விளம்+விளம்+விளம்+விளம்+விளம்+மா+தேமா= 7 சீர் அரையடிக்கு x 2 = 14)

    இதனைக் கொண்டு யான் அடியெடுத்துத் தருகிறேன் இதோ:



    முத்தமிழ்க் கடலிலே மூழ்கிய புலவர்கள் முதிர்ந்தபல் கோடி முத்தை
    .. ......மொண்டெமக் களித்ததால் விளைந்ததோர் களிப்பினில் மிதந்துன திளமை போற்றி

    இத்தினம் தன்னிலிவ் வெளியனேன் இயற்றிடும் சிறியதோர் கவிதை என்னும்
    … ...இம்மலர் தன்னைநீ இகழ்ந்திடா(து) ஏற்றெனக் கின்னருள் புரிகுவாயே.

    ReplyDelete
  12. குறிப்பு: இதுவும் என் “ஐடி” தான். இன்று இணையத் தள நேரலைக் கவியரங்கில் இறுதியுரைக்கு நன்றி கூறும் வண்ணம் ஒரு பாடல் இயற்றி ஆங்குச் செலுத்திட இந்த முகவரியில் உள்ள என் மின்மடலைத் திறந்து வைத்திருந்ததால் இந்த “ஐடி”யில் என் பின்னூட்டம் பதிவாகி விட்டது. குழப்பம் வேண்டாம்.



    எனக்கு இரண்டு முகவரிகள் உள”

    1)ABUL KALAM BIN SHAICK ABDUL KADER

    2) KAVIANBAN KALAM, ADIRAMPATTINAM

    இரண்டும் ஜிமெய்ல் ஐடி

    ReplyDelete
  13. ஆண்களுக்கு பார்வையில் கன்னியத்தையும்
    பெண்மைக்கு நாணத்தையும் மேலும் ஒழுக்கத்தையே மன வேலியாகக் கொண்டால் போலிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதையும் நம்மை நாமே காக்க ஒழுக்கமெனும் வேலியே சிறந்ததென கூறிய வரிகள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். ஐயா. மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். அனைவருக்கும் சென்றடைய வேண்டிய நல்ல கருத்து . பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய சகோதரி சசிகலா,
      உங்களின் ஒழுக்கம் பேணும் உயர்குணம் உங்களின் பின்னூட்டங்களிலும், கவிதைகளும் காண்கிறேன்; அவ்வணணமே ஈண்டுப் பதிந்திருக்கும் பின்னூட்டத்திலும்
      \\ ஆண்களுக்குப் பார்வையில் கண்ணியத்தையும்
      பெண்மைக்கு நாணத்தையும் மேலும் ஒழுக்கத்தையே மன வேலியாகக் கொண்டால்\\

      என்னும் இவ்வரிகள் உண்மைப்படுத்தியுள்ளன.

      உங்களின் ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கருத்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  14. அன்பின் குருவே நபிதாஸ், அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஈண்டுப் பொதுதளத்தில் நீண்டு போகும் பின்னூட்டங்கள் என்பதால், தங்களின் மின்மடல் முகவரியைத் தயைகூர்ந்து அனுப்புக; என் மின்மடல் முகவரிகள் இதோ:

    kalaamkathir7@gmail.com
    kalamkader2@gmail.com

    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து யாப்பின் பாடங்கள் கற்கலாம்.

    இதோ இந்த வெண்பாவை எங்கள் யாப்பின் குழுமத்தில் நடந்தேறிய (அடியேனும் பங்குபெற்ற) நேரலைக் கவியரங்க இறுதியுரைக் கவிதை அளித்து நன்றியுரைக்கும் அக்கவியரங்கத் தலைவர்க்கு யான் அனுப்பிய வெண்பா. (இதற்காகவே இந்த முகவரியைத் திற்ந்தேன்; அதனால் பின்னூட்டங்களும் Kavianban KALAM, Adirampattinam என்று வந்து கொண்டிருக்கின்றன.

    இதோ அந்த வெண்பா:

    பாக்களெலாம் வெல்லத்தின் பாகாய் இனித்திட
    நாக்கிலுமே நற்றமிழ் நர்த்தனம் ஆடிட
    யார்க்குவரும் இத்தகு யாப்பின் தலைமையேற்கக்
    காக்குமந்த தெய்வத்தின் காப்பு

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நேரங்கள் அவ்வளவு எளிதாக கிட்டாது. கிடைக்கும் நேரத்தை பயன் படுத்துகிறேன். எனது நோக்கங்களுக்கு தடங்கள், குறிக்கீடு இன்றி இருத்தல் நலம்.
      நன்றி !

      Delete
    2. \\எனது நோக்கங்களுக்கு தடங்கள், குறிக்கீடு இன்றி இருத்தல் நலம். \\

      இவ்வரிகளின் பொருள் அறிய அவா. எனக்கு விளங்கவில்லைல் தெளிவாக- விளக்கமாக எழுதினால் புரிந்துக் கொள்வேன்; இல்லையெனில் தவறான புரிதலுக்கு இடமளித்து விடும் என்று அஞ்சுகிறேன்.

      அடியேன் மட்டும் தான் நேரமின்மையுடன் கஷ்டப்பட்டுக் கொண்டே கவிதையிலக்கணம் கற்றுக் கொண்டும், பாக்கள் வனைந்துக் கொண்டும் இருக்கிறேன் என்று நினைத்தேன்; பெருநாள் அன்று அன்பு நண்பர் அதிரை மெய்சா அவர்களைக் கண்டும் கேட்டும் அவர்களும் இவ்வண்ணம் நேரமின்மையுடன் போராடிக் கொண்டே எல்லாத் தளங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்தேன்; அதுவேபோல், தாங்களும் நேரமின்மையுடன் இருப்பதும் அறிந்தேன்.

      பொதுவாக, இத்தளத்தின் நிர்வாகி முதல் எல்லாப் பங்களிப்பாளர்களுக்கும் இதே நிலமைதான் என்றும் அறிந்தேன்.

      Delete
    3. தங்களின் மின்மடல் முகவரிக் கிட்டியது; இன் ஷா அல்லாஹ், இனிமேல் ஆங்குச் சென்று உரையாடலாம்.

      Delete
  15. போலிக்கு போடவேண்டும்
    வேலி
    தறிகெட்ட ஜாலிக்கும்
    போடவேண்டும் வேலி
    மூலி எனும் வார்த்தைக்கும்
    போடவேண்டும் வேலி

    வாழ்த்துகள் கவியன்பரே

    ReplyDelete
    Replies
    1. நல்ல “ஜாலி மூடில்” இருக்கும் தொழிலபதிபரும், எழுத்தாளரும், வருங்காலக் கவிஞருமான, மு,செ,மு,சஃபீர் அஹமட் அவர்களின் “ஜாலியான” மூடில் நெய்திருக்கும் திருப்பூர் நேர்த்திமிகுக் கவிச்சட்டைப் பொருத்தமாய்க் கண்டேன்.

      உங்களுடைய வாழ்த்தினுக்கு உளம்நிறைவாய் நன்றி பகர்கிறேன். ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      இம்முறை பெருநாள் விடுமுறையில் ஊரில்-நேரில் சந்திக்க இயலாமற் போனது; ஆயினும், அன்பு நண்பர் அதிரை மெய்சா அவர்களின் சுவைமிகுந்த பசியாறுதலுடன் - அவையடக்கமான உரையாடலுடனும் என் பெருநாள் இனிதே நிறைவேறியது. அதிரை நியூஸிலும் உங்களின் வாழ்த்தைக் கண்டேன்; மட்டிலா உவகை எய்தினேன்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers