.

Pages

Sunday, March 16, 2014

கவனம் தேர்தல் !?

கச்சேரிகள் ஆரம்பம்
கண்டபடி வாக்குறுதிகள் பளிச்சிடும்
மிச்சமில்லாமல் சிந்திப்பார்
மீறும் எதனையும் செய்திடுவார்
துச்சமாகக் கருதிடுவார்
துணிவுடன் தர்மத்தை மிதித்திடுவார்
அச்சம் கொள்ளார்
அரியணை ஏறிடத் துடிப்பார்.

ஆயுதங்கள் அனைத்தையும்
அளவின்றி பயன்படுத்தத் தீட்டுவார்
பாயும் சட்டங்கள்
பலப்பலப்பாய் பலபக்கம் மின்னும்
சாயும் நீதி
சல்லடைக் கொண்டும் தேடும்
நீயும் நானும்
நேர்மை பேசிப் பாதிப்போம்

மதமும் சதியும்
மனிதனைப் பிளந்து வாக்காக
எதனையும் செய்வார்
எப்படியும் வெல்லுவதே நோக்கம்
பதமாகநாம் பொறுமையில்
பவ்வியமாகத் தேர்தல் கடக்கவேண்டும்
அதர்மம் இப்படி
அடிக்கடி குறிக்கிடும் அசையாதே.

அனிச்சையான நம்முணர்வில்
அனைவரும் அண்ணன் தம்பியே
மனிதனாய் வாழ்வது
மண்ணில் பெரும் சவால்தான்
புனிதனாய் வென்றிட
புரிந்திடு அனைவரும் தான்போல்
இனியும் வேற்றுமை
எப்போதும் கொண்டிட வேண்டாமே.

அவன் குருதி
அதனைக் காண வலிக்கும்
எவனும் தூண்டாத
என்னிலும் உன்னிலும் ஆனவுணர்வு
சவம் ஆனதும்
சகிப்புகள் இயல்பாய் தோன்றும்
கவனம் மனிதா !
கடத்திவிடு காழ்ப்புணர்வுத் தேர்தல் !

நபிதாஸ்

9 comments:

  1. கவனத்துடன் கட்டாயமாக வாக்களிப்போம் !

    // கடத்திவிடு காழ்ப்புணர்வுத் தேர்தல் ! //

    இறுதி வரி திரும்ப திரும்ப வாசிக்க தோனுகிறது

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் காலத்தில் எப்படியும் வெற்றிபெற
      குறிப்பிட்ட மக்களின் உணர்வை தூண்டி,
      குழப்பங்களை ஏற்படுத்தி
      வாக்குகள் அரசியல் கட்ச்சிசார்பாகவோ அல்லது வேட்பாளர் சார்பாகவோ பிரிந்து கிடப்பதை
      தனக்கு சாதகமாக வாக்களிக்க
      சில நீண்ட வடுக்களை ஏற்படுத்தும் துவேசங்களை கிளப்பி
      சாதி, மதம் பாராமல்
      அண்ணன் தம்பி போல் ஒற்றுமையாக வாழும் சூழலை கெடுத்துவிடுவார்கள்.
      அதனாலேயே கடைசி வரியில் //கடத்திவிடு காழ்ப்புணர்வுத் தேர்தல் !// என்று எழுதியுள்ளேன்.

      எனவே தாங்கள் மட்டுமல்ல அனைவரும் அதனை திரும்ப படிப்பது நலமே.

      Delete
  2. பதிவுக்கு நன்றி.
    அருமையான கவிதை.

    தேர்தல் நேரமாச்சே, யார் வர்றாங்களோ இல்லையோ, காசு வாங்க மக்கள் தயார் நிலையில் உள்ளார்களாம்.

    ஓட்டு போதுவது நமது உரிமை, அதை எந்த சூழலிலும் விற்றுவிட கூடாது.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் (election) என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும். தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன. தேர்தல்களின் மூலம், பகுதி சார்ந்த மற்றும் உள்ளுர் அரசுஅமைப்புகளில், சட்டசபை, சில சமயங்களில் நிர்வாக அமைப்பு, நீதித் துறை ஆகியவற்றில் உள்ள பதவிகள் நிரப்பப்படுகின்றன. இந்த முறையானது பல தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் தொடங்கி, தன்னார்வலர் கூட்டமைப்பு மற்றும் கூட்டுரிமைக் குழு வரையில் பலவற்றிலும் பயன்படுகிறது.

      Delete
    2. நவீன குடியரசில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறைமையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பண்டைய ஏதென்ஸ் நகரின் பொது ஆர்ச்டைப் என்னும் பிரதான மாதிரி குடியாட்சி நடைமுறைக்கு மாறானது. தேர்தல்கள் என்பவை ஒலிகார்க் எனப்பட்ட ஒரு சிறு குழு அரசோச்சும் நிறுவனத்திற்கானது என்றும் பெரும்பாலான அரசியல் பதவிககளை அவர்கள் தமக்குள் பிரித்துக் கொள்ளும் ஒரு பங்கீடு என்பதாகவுமே இருந்து வந்தன. இதன் மூலம், பதவிக்கு வருபவர்கள் ஒரு குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
      முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது ஆகியவற்றை தேர்தல் சீர்திருத்தம் விவரிக்கிறது. தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் இதர புள்ளி விபரங்கள் (குறிப்பாக எதிர்கால முடிவுகளை கணிக்கும் ஒரு முறையாக) பற்றிய ஒரு ஆய்வு செஃபாலஜி எனப்படுகிறது.
      வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது என்பது "தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு முடிவெடுப்பது" என்று பொருள்படும். சில சமயங்களில் வாக்குச் சீட்டின் பிற வடிவங்களான, குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பொதுமக்கள் நேரடியாக கருத்து தெரிவிக்கும் கருத்துக் கணிப்புகளும் (Referendum) தேர்தல் என்றே அழைக்கப்படுகின்றன.

      Delete
    3. இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.

      Delete
    4. தொடர்புடைய கருத்துக்களை தாராளமாகத் தந்தமைக்கு நன்றிகள் பல.

      Delete
  3. தக்க சமயத்தில் பதிந்துள்ள தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கவிதை அருமை.

    ReplyDelete
  4. தேர்தல் இது ஒரு புயல்.
    அதனை நாம் கடக்க வேண்டும்.
    புயல் போனபின் பாதிப்புகள் வருவது இயற்கை.
    பாதிப்புகள் வேட்பாளருக்கு மட்டும் இருந்தால் பரவாயில்லை. காரணம் அவர் இரண்டையும் எதிர்பார்த்தே களத்தில் உள்ளார். மற்றவரின் பாதிப்புகள் என்ற மனகசப்புகள்,
    மனகசப்புகள் என்ற கசப்புகள் ஒருவர், இருவர் இடையில் இருப்பதும் பின் பெரும் பாதிப்புகள்.
    அல்லது அக்கசப்புகள் சிலர் அல்லது பலர் மத்தியில் ஏற்பட்டால் அதுவும் பெரும் பாதிப்புகள்.
    பாதிப்புகள் துவேஷமாகவும் ஆகிவிடும் வடுக்கள்.
    இவ்வாறு பல விளைவுகளை தரக்கூடியதாக இன்றைய அரசியல், ஆட்சி தேர்தல்கள் இருக்கின்றது.
    இது மாற வேண்டும்.
    அது மாற பெரும் செலவுகள் இல்லாத தேர்தல் முறைகள் அவசியம் வந்தாக வேண்டும்.
    அனைவரும் அவசியம் இதனை கவனத்தில் இருத்த வேண்டும்.
    பண வலிமை உள்ளவன்தான் நாட்டை ஆளமுடியும் என்பது சரியாகாது.
    ஆளும் அறிவு, வழி நடத்தும் திறமை மற்றவர்களிடம் இல்லை என்பதுபோல் உள்ள அரசியல் முறை மாற வேண்டும்.

    இக்கருத்தையும் எழுத காரணமான அதிரை.மெய்சா தங்களுக்கு நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers