.

Pages

Monday, November 3, 2014

கல்வி !

கவர்ச்சியான உறைகளிட்டப்
பட்டம் வேணுமா
இளைஞர்! பட்டம் வேணுமா?

காசு உள்ள சீமான் மட்டும்
வாங்குறாரம்மா - பட்டம்
வாங்குறாரம்மா!

ஏழையான மாணவனால்
வாங்க முடியுமா?
ஏங்கி ஏங்கி மூச்சுக்
கீழே வாங்குறாரம்மா!

கல்வி என்று சொன்னவுடன்
தேனாய் இனிக்குது!
தேடிப்போயி முடிவு கண்டால்
எட்டிக் காயது!

பணம் குவித்த கோடீஸ்வரர்
நாட்டை ஆளலாம்
பணக்காரப் பிள்ளைகளே
பதவி ஆளலாம்!

இந்த நாட்டில் ஏழைகளோ
கையை ஏந்தலாம்
அந்தோ வந்த கண்ணீரோடு
பையை இழக்கலாம்!

படித்த ஏழை மாணவனோ
வீரனாகணும்
பண்பில்லாத நாட்டில் காய்ந்த
விறகுவாகினான்!

பட்டம் பெற்றும் மம்மட்டியில்
பாடுபடுகிறான்
கட்டம் இந்த கட்டம் போக
வேண்டுமே ஐயா!
கட்டையாகிப் போன பிறகா?
கணக்கைச் சொல்லய்யா!

படித்திடாத மேதைகளும்
தாளாளர் ஆனார்
படிக்கவரும் மேதைகட்குப்
பாதை காட்டுறார்

நூல் படித்தும் முன்னேற்றமில்
வால் பிடிக்கிறார்
வால் பிடிக்க முடியாதவர்
கால் பிடிக்கிறார்!

கல்வி வேண்டுமா! ஐயா
கல்வி வேண்டுமா
கற்றபின்னே மயங்கி நிற்கும்
கல்வி வேண்டுமா?...
'கவிஞர்' அதிரை தாஹா

8 comments:

  1. மதிப்பிற்குரிய கவியாலருக்கு அன்பு சலாம்.

    கல்வியின் இன்றைய கால நிலை கண்டறிந்து
    கவி பாடிய வரிகள் யாவும் அருமை .

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்......முதலில் அதிரைநியூசுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.ஆம்.நமது வாழும் ஒரு பொக்கிசமான ஹாஜி M தாஹா சார் அவர்களை கண்டெடுத்து பதிவுகள் இட்ட :அதிரை நியூஸ் மென்மேலும் மெருகேறும் என்பது திண்ணம். ஆகவே மரியாதைக்குரிய தாஹா சார் அவர்களை முழுதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.கவி மட்டுமல்லாது நல்ல ஹதீஸ் மற்றும் மானிட வாழ்வுக்கு அவசியமான கருத்துக்கள் வழங்கும் ஹாஜி தாஹா சார் அவர்களை அல்லாஹ் நீடித்த சுக வாழ்வு அளிக்கப் போதுமானவன்.

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை தந்த மூத்த கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    கற்ற கல்வியை முறையாக பயன்படுத்த வேண்டும். திறமைகள் ஒருபோதும் மறைந்து விடக் கூடாது.

    பணம்கொண்டு கற்றிடும் கல்வியைவிட மனம்கொண்டு கற்றிடும் கல்வியே சிறந்ததாகும்..

    ReplyDelete
  4. மரியாதைக்குரிய தாஹா சார் அவர்கள் தொடர்ந்து எழுதுவது மகிழ்வாக இருக்கிறது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற அடிப்படையில் அவர்களின் பதிவுகளை வரவேற்கிறேன். சகோதரர் ஜெய்சா அவர்களின் க்ருத்தையும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  5. ஆஹா ! பொக்கிஷம்
    அதிரையில் இருக்குது
    தாஹா பெயரினில்
    தாகங்கள் தீர்க்குது

    வாழும் நம்மோடு
    வாசம் வீசுது
    பாலும் தேனுமாகப்
    பருகத் தருது

    பேசும் வார்த்தையில்
    பேதம் நீக்குது
    பேணப் பெருமான்
    பெருமைகள் தருது

    சமூகம் சிறக்கச்
    சங்கதித் தூவுது
    வியூகம் தந்தே
    விரட்டுது மாயை

    கணினி உலகில்
    கவிஞர் நிலையில்
    தனிமைக் காட்டுது
    தட்டச்சர் வேண்டுது

    அதிரை நியூசும்
    அடித்துத் தந்தால்
    பதிக்கப் பலவும்
    பகரத் தருமே

    இவர்கள் போல
    இவ்வூர் பெறவே
    உவர்ந்தே நானும்
    உணர்வுத் தந்தேனே.

    ReplyDelete
  6. நாட்டுப்புற பாடலில் நல்லதொரு படிப்பினை, "படிப்பினை"ப் பற்றி
    "கல்வி" பற்றிய என் பாடலை , தங்களின் பார்வைக்கு கல்விமான் கவிஞர் தாஹா ஐயா அவர்களின் கனிவான பார்வைக்கு:http://www.kalaamkathir.com/2013/04/blog-post_5.html



    திருமறை கூறும்
    ....திடமான கட்டளை
    .திருநபி கூறும்
    ...""தொலைவான ஒட்டகம்""

    அகிலத்தின் காட்சிகளை
    .....அறிவிக்கும் முன்னோடி
    அகிலத்தைக் காண்பதற்கு
    ...அணிகின்ற கண்ணாடி

    சிந்தைப் பூட்டைச்
    ..சிறப்பாய்த் திறந்திட
    விந்தை மிக்க
    ..விரைவுத் திறவுகோல்

    சுரந்து வழியும்
    ...சுனைவழியின் தொடராம்
    பரந்து விரியும்
    ....பகுத்தறிவின் சுடராம்

    மிதக்கும் ஒளியாம்
    ..மின்னல் கீற்றாம்
    செதுக்கும் உளியாம்
    ..சொர்க்கக் காற்றாம்

    மூளையின் உணவாகும்
    ...முழுமையான கல்வி
    மூளையே உணவாகும்
    ....முழுமையான கல்விக்கு!

    உள்ளக் கிணற்றின்
    ...ஊற்றுக் குழியாம்
    அள்ளக் குறையா
    ...ஆற்றுச் சுழியாம்

    உலகம் சுற்றுவதும்
    ...உலகத்தைச் சுற்றி
    பலனைக் கற்றுதரும்
    ... பலமான கல்வி

    மண்ணில் கைவைத்து
    ....மனிதன் கற்றது
    விண்ணில் கால்வைத்து
    ..வியப்பைப் பெற்றது

    எல்லையும் வயதும்
    ...இதற்கு மட்டும்
    இல்லையே மனிதா
    ...இறப்பில் முற்றும்

    மரணம் முடிக்கும்;
    ....மடைமை ஒழிக்கும்;
    இரந்தும் படித்தால்
    ...இயலாமை அழிக்கும்

    செல்வமும் வீரமும்
    ....செழித்து வளர
    கல்வியின் வீரியம்
    ....கடவுள் வரமாம்

    சென்ற இடமெலாம்
    .....செழித்திடும் வெற்றியாம்
    வென்று பெறுபவர்
    ......வியத்தகு கல்வியால்


    "கவியன்பன்"
    அபுல் கலாம்

    ReplyDelete
  7. தாஹா சார் நலமா? நீங்கள் முக நூலில் இருப்பது தெரியாது உங்கள் புது கவிதைகளை படிக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது எல்லாமே அற்புதம் சார்---சரஸ்வதி ராசேந்திரன் மன்னார்குடி

    ReplyDelete
  8. தாஹா சார் கவிதைகள் முகநூலில் அவர்கள் பதிய வில்லை. அவர்களின் உறவினர் பதிக்கின்றனர். அவர்களுக்கு கணினி இயக்குவது கடினம். அதனால் பதில் அவர்களால் இடமுடியவில்லை. இருப்பினும் பதில் கண்டு கூறினால் மகிழ்வை அவர்முகம் காட்டத் தவறுவதில்லை.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers