.

Pages

Monday, January 19, 2015

[ 10 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(33)
பார்வையில் பார்ப்பவன் பார்க்கிறான்; பாராயோ
பார்வைகள் பார்த்திடுவார் பார்வையாக ! - பார்த்திடுப்
பார்படைத்தப் பங்கமிலாப் பந்தப் பரமனின்
பார்வைதான், பக்குவமாய்ப் பாரு.

(34)
பாரினில் மிக்கப் பரிவுக்கருணையில்
கூரியப் புத்தியில் கூறிடுவார் - நேரிய
நல்வழிக் காட்டிடுவார் நாயன் அடிமையென்பார்
அல்லலும் நீக்கும் அவர்.

(35)
அவரிடம் ஆய்ந்தே அறிதலில் தன்னை
விவரம் விரித்திடும் விந்தை - இவரில்
இருவர் இயம்பும் இருமை நிலையும்
ஒருமை வணக்கத்தில் உண்டு.

(36)
உண்டுமைகள் உள்ளதின் ஒன்றின் வெளிப்பாடாய்
கண்டிடுவோர் தன்னிலே காட்சியாய் - கொண்டிடும்
கோலம்அ றிந்திடும் கோவவனைத் தன்னிலே
காலத்தே தேர்ந்திட்டே காட்டு.

நபிதாஸ்

வெண்பா (33)  
பொருள்: பார்வைக்கு உரியவன் ஆனப் பரம்பொருள், உன் கண்மூலம் பார்க்கின்றான். ஆனால் நீதான் பார்ப்பதாய்ப் பார்க்கின்றாய். அவனின்றி தனக்கு என்று ஒரு ஆற்றலும் இல்லா மனிதன் எங்கனம் பார்க்கமுடியும் ? பிரிவற்ற ஒன்றான அவன் ஆற்றலே பார்க்கின்றது. ஆனால் பிரித்துப் பழக்கப்பட்ட இவனோ தன் பார்வையென உரிமைக் கொள்கிறான். சர்வத்தையும் படைத்தப் பரம்பொருளின் ஆற்றலில் பார்வையும் அவன் ஆற்றல்தான் என்ற பக்குவம் பெற்றுப் பார் என்பதாகும்.

வெண்பா (34)  
பொருள்: இவ்வுலகில் அணைத்துயிரின் மேல் அன்பு மிகுந்தவர். அறியாமைகளை நீக்கப் பரிவுக் கருணையில் அவர்கள் இறை நெருக்கத்தில் பெற்றக் கூரிய அறிவினில் நற்போதனைகள் கூறிடுவார். குற்றம் காணவியலாச் சரியான நல்வழிகளைக் காட்டிடுவார். துன்பங்களைக் களையும் அவர்கள் இறைவனின் அடிமைதான் என்றேதான் கூறிடுவார்.

வெண்பா (35)  
பொருள்: இறை நெருக்கத்தைப்பெற்ற அப்பெரியோர்களைப் பற்றி மிகவும் ஆழ்ந்து சிந்திக்க விந்தையான விவரங்கள் வெளிப்படும். இவர்கள் இணையில்லாத தன் ஒருமை வணக்கத்தில் இவர்களும் பரம்பொருளும் உரையாடிக்கொள்ளும் விந்தையும் உண்டு என்பதாகும்.

வெண்பா (36)  
பொருள்: உண்மையில் தெளிந்தவர்கள் பலதாகத் தோன்றும் அனைத்தும் ஒன்றின் வெளிப்பாடு என்றதனை, தன்னையும் பிரியாப் பார்வையில் கண்டிடுவார்கள். பலதாகக் காணப்படும் அத்தூயவனின் ஒருமை நிலை தன்னிலே காலம் கடந்துச் செல்லாமல் அவ்வறிவில் தேர்ந்தவனாகி அறிந்துக்கொள் என்பதாகும்.

2 comments:

  1. பார்வையில் பலவிதம்
    பார்த்திடும் விழியிலும்
    உள்ளமும் பார்த்திடும்
    உவமைகள் கூறிடும்
    உங்களின் பார்வையில்
    உலகமே தென்படும்

    வெண்பாவின் பார்வையில்
    வெளிர்ந்திடும் மனங்களும்
    அன்பெனும் பார்வையில்
    அகிலமே அடங்கிடும்
    அடிமையின் பார்வையில்
    கடினமும் இளகிடும்

    ReplyDelete
  2. பார்வைப் பலவிதம் பார்த்த விழியினை
    கோர்த்தே உணர்ந்தே கொடுத்தாயே - ஆர்ப்பரித்தேன்
    யார்யெம் அதிரைமெய்சா அன்பின் இதயமேநீர்
    பார்ப்போற் றிடும்நற் பரிசு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers